பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இப்போது இல்லை!
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்துவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்துவது பற்றி வரும் ஜூன் 25ம் தேதி முடிவு செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்திருந்தார்.
சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்யும் பொருட்டு அதன் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று நீதிபதி கிரீத் பாரிக் குழு பரிந்துரைத்தது.
இது தொடர்பாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த குழுவின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.
இந் நிலையில் விலை உயர்வு தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் முரளி தியோரா அறிவித்திருந்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 77 டாலராக உள்ளது. ஆனால், இங்கு கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 டாலர் என்ற கணக்கில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு தியோரா கடிதம் எழுதினார்.
இந்த விற்பனை வரி, மாநிலங்களிலேயே அதிகமாக ஆந்திரத்தில் 33 சதவீதமும் தமிழகத்தில் 30 சதவீதமும் விதிக்கப்படுகிறது.
விற்பனை வரியை மாநில அரசுகள் குறைத்தால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும் பெரும் பாதிப்பு ஏற்படாது என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் ஒரு தடவை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த இயலாது. மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை அறிவிக்கும் முன்பு சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம், என பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
25ம் தேதி அமைச்சர்கள் கூட்டம் கூடினாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பற்றி விவாதிக்கப்படாது என்று அந்த அதிகாரி கூறினார்.