செம்மொழி மாநாட்டிற்கு வந்த குமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் 3 பேர் விபத்தில் பலி
கோவை: செம்மொழி மாநாட்டிற்கு வருகை தந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மூன்று பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலாளர் ராஜா (71). இவரும், இவரது ஆதரவாளர்கள் சிலரும் செம்மொழி மாநாட்டிற்காக கோவை வந்திருந்தார். மாநாட்டில் கலந்து கொண்டு பாலக்காடு செல்வதற்காக காரில் புறப்பட்டுச் சென்றனர்.
கார், ஈச்சனாரி அருகே புறவழிச் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்ற போது எதிரே வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் ராஜா, கார் ஓட்டுநர் சவுத்திரி (35) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் பயணம் செய்த அருணாச்சலம் (74) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
இந்த நிலையில், இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முருகன் என்பவரை மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.