தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி வருவதைக் கண்டித்து இன்று சென்னையில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இதில் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாக முன்பு மீன் பிடித்து வாழ்ந்து வந்த நிலை மீண்டும் வர வேண்டும்.
ஆனால் 1974ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில், அதற்கு முரண்பாடாக இரு நாட்டு கடல் எல்லையை வகுத்து, யாரும் மீறக் கூடாது என்பது கண்டனத்துக்குரியது, சட்டவிரோதமானது.
எனவே இப்படிப்பட்ட முரண்பாடானா ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தேமுதிகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது முக்கிய கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.