கர்நாடகா: மராட்டிய பகுதிகளை யூனியன் பிரதேசமாக்க மகா. முதல்வர் கோரிக்கை
மும்பை: கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்கள் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள பெல்காம், குல்பர்கா, பீதர் மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் 865 கிராமங்களை மகாராஷ்டிர மாநிலம் உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் பெல்காம் மாவட்டமே தங்களுக்கே சொந்தம் என்று மகாராஷ்டிரம் கூறி வருகிறது.
இதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் இரு மாநில அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் இந்த எல்லைப் பகுதியில் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பெல்காம் கர்நாடகத்துக்கே சொந்தம், அங்கு மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகளவில் இருப்பதால், மராட்டியத்துக்கு சொந்தம் என்று கூற முடியாது என்று தெரிவித்திருந்தது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றிக் கொண்டுவிட்டது.
மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து மராட்டி எகிகரண் சமிதி கட்சி சார்பில் பெல்காமில் கண்டன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில், மராட்டிய எகிகரண் சமிதியினரும், சிவசேனா கட்சியினரும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்தபோது முதல்வர் எதியூரப்பாவின் படத்துடன் இருந்த பேனர் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் கர்நாடக மாநில கொடியை கீழே இறக்கவும் அந்த கும்பல் முயற்சி செய்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தனர்.
இந் நிலையில் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான், கர்நாடகாவில் உள்ள 865 மராத்தி மொழி பேசும் கிராமங்களையும் தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்ட மேலவையில் இன்று பேசிய அவர், எல்லைப் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு காணும் வரை இந்தப் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்கலாம். இது தொடர்பாக மகாராஷ்டிர அனைத்துக் கட்சி குழுவினரோடு பிரதமரை சந்தித்து நாளை மனு கொடுப்பேன்.
மராத்திய கிராமங்களின் பெயர்களை கர்நாடக அரசு மாற்றி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் மராத்தி மொழி பேசும் மக்களை கர்நாடகம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.
இந்த விஷயத்தில் மகாராஷ்டிர பாஜகவினர் கர்நாடக பாஜக அரசுடன் பேச வேண்டும். பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் நாங்கள் தயார் என்றார்.
இதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.