பணமில்லாமல் சிகிச்சை பெறும் வசதியை ரத்து செய்த மெடிக்கல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
அதற்குப்பதில், சிகிச்சை பெற்று முடித்த பின்னர் அதுதொடர்பான ரசீதுகளை சமர்ப்பித்து செலவழித்த பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேசமயம், முழுப் பணமும் தரப்படும் என்ற உத்தரவாதமும் கிடையாதாம்.
தற்போது பல்வேறு மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வழங்கும் மெடிக்ளைம் திட்டத்தின்படி நாம் நமது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தால் செலவுகளை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும். அதற்கான கார்டை மட்டும்மருத்துவமனையில் காட்டினால் போதும்.
இந்த திட்டத்தைத்தான் ஜூலை 1ம் தேதி முதல் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. இனிமேல் சிகிச்சையை முடித்து விட்டு எவ்வளவு செலவு செய்தோமோ அதற்கான ரசீதுகளை நாம் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் நமக்கு எவ்வளவு தகுதியோ அந்தப் பணத்தை மட்டும் திருப்பித் தருவார்கள்.
டெல்லியில் மட்டும் கிட்டத்தட்ட 150 மருத்துவமனைகளில் இந்த பணமில்லாமல் சிகிச்சை பெறும் வசதியை 18 காப்பீட்டு நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. சென்னை, மும்பை உள்ளிட்ட பிற நகரங்களிலும் கூட இதே நிலைதான்.
வருடத்திற்கு ரூ. 6000 கோடி வரை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் தொகையாகப் பெறுகின்றன. அதேசமயம், வருடத்திற்கு ரூ. 1500 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறதாம், இந்த பணமில்லாமல் சிகிச்சை பெறும் முறை மூலம். இதனால்தான் இத்திட்டத்தை ரத்து செய்துள்ளனவாம் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள்.
தற்போது 18 மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 3000 மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மெடிக்ளைம் வசதியை அளித்து வருகின்றன. இவற்றில் அரசுத் துறை காப்பீட்டுக் கழகங்களும்
அடக்கம்.
இந்தத் திட்டத்தை சில மருத்துவமனைகள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு தேவையில்லாமல் அதிக அளவில் கட்டணத்தை வசூலித்து முறைகேடுகளிலும் ஈடுபடுகின்றனவாம். இதுவும் திட்டம் ரத்தானதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் பணத்தைக் கறக்கும் மருத்துவமனைகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்கிறார் காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர்.