கர்நாடக நிலவரம் சிக்கலாகிறது-ரெட்டி சகோதரர்கள் விலக ஆளுநர் கோரிக்கை
கர்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத சுரங்க தொழில் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் மற்றும் தேவே கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.
கர்நாடக பாஜக அரசை தாங்கிப் பிடித்துள்ள ரெட்டி சகோதரர்களான ஜனார்த்தன் ரெட்டி மற்றும் கருணாகர ரெட்டி ஆகியோரைக் குறி வைத்தே இந்தக் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் விடுத்தன.
ஆனால் இந்தக் கோரிக்கையை நேற்று சட்டசபையில் முதல்வர் எதியூரப்பா நிராகரித்து விட்டார். இதையடுத்து நேற்று மாலை அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 45 எம்.எல்.ஏக்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். நேறறிரவு சட்டசபைக்குள்ளேயே படுத்து உறங்கிய அவர்கள் இன்றும் முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை வெளியே வரமாட்டோம் என்று கூறிவிட்டனர். கடந்த 30 மணி நேரமாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபையும் அடியோடு முடங்கியுள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கூறுகையில், சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்கை விரைவுபடுத்த வேண்டும். இதை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
ஆனால் அதை ஏற்க அரசு மறுத்து விட்டது. அதன் பிறகே இந்தப் போராட்டத்தில் குதித்தோம். எங்களது கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்.
எங்களது கோரி்ககையை வலியுறுத்தி பெங்களூர் முதல் பெல்லாரி வரை யாத்திரை செல்லப் போகிறேன் என்றார் குமாரசாமி.
ஆளுநரும் கொந்தளிப்பு
இந் நிலையில் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை மாநில ஆளுநர் பரத்வாஜ் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடகத்தில் அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோதமான முறையில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்கள் பதவியில் நீடிப்பது சரியல்ல.
இருவரும் நீக்கப்பட வேண்டும். தங்களால் எதியூரப்பா அரசுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார்.
ஆளுநரே இப்படிப் பேசியிருப்பதால் கர்நாடக நிலவரம் மேலும் சிக்கலாகியுள்ளது.