வேநாடு எக்ஸ்பிரசில் வெடிகுண்டு சோதனை: கேரளாவில் பரபரப்பு
கொல்லம்: ஷோரனூர்-திருவனந்தபுரம் இடையிலான வேநாடு எக்ஸ்பிரசில் சந்தேகத்திற்கிடமான வகையில் சூட்கேசுடன் 3 வாலிபர்கள் ஏறியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கோட்டயம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.
சில தினங்களுக்கு முன் எர்ணாகுளம்-திருவனந்தபுரம் வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. நிலப்பூரில் நிறுத்தப்பட்டிருந்த ஷோரனூர் பயணிகள் ரயிலில் பிரேக் குழாய் அறுக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூணித்துறாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் தனியார் பஸ்சில் அப்பகுதியை சேர்ந்த ராபர்ட் என்பவர் பயணம் செய்தார்.
அவருக்கு அருகில் 3 வாலிபர்கள் சூட்கேசுடன் அமர்ந்திருந்தனர். அதில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ராபர்ட் அந்த வாலிபர்களிடம் பெட்டியில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளார்.ஆனால் அந்த வாலிபர்கள் பதில் கூறாமல் பஸ்சில் இருந்து உடனடியாக இறங்கி சென்றனர்.
சந்தேகம் அடைந்த ராபர்ட் திருப்பூணித்துறா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த 3 வாலிபர்களும் அங்குள்ள ரயில் நிலையத்தில் இருந்து ஷோரனூர்-திருவனந்தபுரம் வேநாடு எக்ஸ்பிரசில் ஏறிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக ரயில்வே போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த ரயிலை கோட்டயம் ரயில் நிலையத்தில் நிறுத்தி சோதனையிடப்பட்டது. அதில் சந்தேகத்திற்கிடமான நிலையி்ல் எதுவும் சிக்கவில்லை.
தொடர்ந்து கொல்லம் ரயில் நிலையத்தில் நிறுத்தி மீண்டும் சோதனையிடப்பட்டது. ஆனால் அந்த வாலிபர்களோ, சந்தேகத்திற்கிடமான பொருட்களோ சிக்கவில்லை.
அந்த மூன்று பேரும் யார், என்ன கொண்டு சென்றனர் என்று தெரியவில்லை. அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.