மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயருகிறது
மேட்டூர்: தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனத்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணை நீரை நம்பித்தான் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12- ந் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால், இன்னும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
இந்த நீர் எப்பொழுது வரும் என்ற ஏக்கத்துடன் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். இந் நிலையில் கடந்த வாரம் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இதனால், தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இத்தனை நாட்களாக 79 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 8 மணி அளவில் 79.92 அடியாக இருந்தது. வினாடிக்கு அணைக்கு 2, 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இன்னும் கன மழை பெய்து, அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வசதியாக இருக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.