மும்பையில் தொடரும் கொலைகள்-மேலும் ஒரு மாடல் அழகி தற்கொலை
மும்பை: மும்பையில் மேலும் ஒரு மாடல் அழகி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் சமீபத்தில் விவேகா என்ற மாடல் அழகி மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு மாடல் அழகி தற்கொலை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை வர்சோவாவை சேர்ந்தவர் நடாஷா பட்பிதரி (30). மாடலிங்கில் ஈடுபட்டிருந்தார். இரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடுகள் இவருக்கு உள்ளன. ஒரு வீட்டில் அவரது குடும்பத்தினரும், இன்னொரு வீட்டில் நடாஷாவும் வசித்து வந்தனர்.
நேற்று காலை நடாஷாவின் வீடு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவரது சகோதரர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தார் நடாஷா.
நடாஷாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. காதல் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.