தமிழர்களின் மறுவாழ்வில் இலங்கை அரசு மெத்தனம் : நல்லகண்ணு பேட்டி
குற்றாலம்: தமிழர்கள் மறுவாழ்வுப் பணிகளில் இலங்கை அரசு மெத்தனமாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு கலந்து கொண்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி...
இலங்கை தமிழர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. தமிழர்கள் முள்வேலிக்குள் அகப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அல்லல்படும் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இதுவரை இலங்கை அரசு எதுவும் செய்யவில்லை. இலங்கை தமிழர்களின் நிலையை காண சென்றுள்ள ஐ.நா. குழுவினரை வெளியேற்ற வேண்டும் என்று, அந்நாட்டு அமைப்புகள் அரசின் ஆதரவோடு போராட்டம் நடத்துகிறது.
இதற்கு காரணம் இந்திய அரசு ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து ராஜ உபசாரம் நடத்துவதே.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் மணிமுத்தாறு சிறப்பு பேரூராட்சியில் தமிழக கனிம வளத்துறை கிரானைட் எடுக்க தனியாருக்கு லீசுக்கு விட்டுள்ளது. இதனால் அங்கு பூமிக்கு அடியில் பெரிய வெடியை வைத்து 200 அடி ஆழத்திற்கும் மேல் தகர்த்து வருகிறார்கள். இதனால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதை கண்டித்து வரும் 26-ம் தேதி சேரன்மகாதேவியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.