தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் அமல்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 69 சதவீதம் அளவுக்கு பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வாய்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் விஜயன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மண்டல் கமிஷனின் 50 சதவீத இடஒதுக்கீட்டு பரிந்துரைக்கு மேலாக அதிகரிக்கக் கூடாது என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று, 69 சதவீத இடஒதுக்கீட்டை இப்போதைக்கு தொடரலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சுதந்தர்குமார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்களா என்ற விபரத்தை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஆதாரத்துடன் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
அரசின் அறிக்கைக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், இடஒதுக்கீட்டை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியுள்ள நீதிமன்றம், இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் விஜயனின் வழக்கையும் பைசல் செய்யப்பட்டுவிட்டது.