For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டபிள்யூ.ஆர்.வரதராஜனுக்குக் கொடுத்தது போலவே எனக்கும் இடையூறு செய்தனர்-கோவிந்தசாமி

Google Oneindia Tamil News

திருப்பூர்: டபிள்யூ.ஆர்.வரதராஜனுக்கு கொடுத்தது போல், எனக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல இன்னல்களை கொடுத்தது. எனக்கு சிறுவயது முதலே கட்சி கொடுத்த மன தைரியத்தால் நான் தற்கொலை முடிவுக்கு செல்லவில்லை. என்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கினாலும் நான் எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று கூறியுள்ளார் கோவி்ந்தசாமி எம்.எல்.ஏ.

இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பதவிக்கு ஆசைப்பட்டு தி.மு.க. அரசுக்கு பாராட்டு விழா எடுப்பதாக என் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவதூறு பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் கட்சி சார்பில்லாத விழா. திட்டமிட்டபடி ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி பாராட்டு விழா நடைபெறும்.

கடந்த 2008-ம் ஆண்டு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டதாக கூறி என்னை கட்சியின் மாநில குழுவில் இருந்தும், சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்குவது என்று மாநிலக்குழு முடிவு செய்து அறிவித்தது.

அந்த முடிவை முழு மனதுடன் அப்போது ஏற்றேன். அதே நேரம் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன். இதே கட்சி தான் எனது ராஜினாமா கடிதத்தை நிராகரித்து, எம்.எல்.ஏ. பதவியில் தொடரும்படி கூறியது.

இப்போது என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக மாவட்ட குழு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. பொதுவாக மாவட்ட குழு எடுக்கும் எந்த முடிவும் மாநில குழுவுக்கு அனுப்பப்பட்டு, மாநில குழு ஒப்புதல் அளித்த பின்தான் நடைமுறைக்கு வரும்.

என்னை கட்சியில் இருந்து நீக்கினால், அதை கட்சி எனக்கு கொடுத்த பரிசாக முழு மனதுடன் ஏற்றுக்கொள்வேன். 14 வயது முதல், கடந்த 42 ஆண்டாக நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பணியாற்றி உள்ளேன். சாதாரண தொண்டனாக என்னை இணைத்து செயல்பட்டேனே தவிர, பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து எதையும் செய்யவில்லை.

கடந்த 2 ஆண்டு காலமாக கட்சி எனக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்தது. இதேபோல் மற்ற தோழர்களுக்கும் கொடுத்தது. இதனால் மிகுந்த மனவேதனையுடன் செயல்பட்டு வந்தேன். எனக்கு கட்சி கொடுத்த பணி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருக்க வேண்டும், அல்லது கட்சி அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது. வெளியில் சென்று கட்சி தோழர்களை சந்திக்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதை மறைத்து என் மீது அவதூறு பரப்பி எனக்கு தோழர்களிடையே அவப்பெயரை வாங்கி கொடுத்தது.

அதுபோல் நான் சட்டமன்ற குழு தலைவராக இருந்த போது முதல்வரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள சட்டமன்ற குழு தலைவர் நான்கு மாதத்தில் 7 முறை முதல்வரை சந்தித்துள்ளார்.

ஒரே பதவிக்கு இரு வேறுபாடு ஏன்? கடந்த 2 ஆண்டுகளில் நடந்த 4 சட்டமன்ற கூட்டத் தொடரில் பொது விவாதத்தில் பேச கூட என்னை கட்சி அனுமதிக்கவில்லை. இது குறித்து 8 பக்கத்தில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் பதில் இல்லை.

கோவையில் நடைபெற்ற கட்சி பத்திரிகையின் கிளை தொடக்க விழாவுக்கு கூட கொங்கு மண்டலத்தில் உள்ள கட்சியின் ஒரே எம்.எல்.ஏ. என்ற முறையில் என்னை அழைக்கவில்லை. மாறாக திண்டுக்கல் எம்.எல்.ஏ. அழைக்கப்பட்டார். நான் பணம் வாங்கியதாக கட்சியினர் என் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்.

என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும்படி மாவட்ட செயலாளர் அறிக்கை கொடுத்துள்ளார். நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. இது மக்கள் எனக்கு கொடுத்த பதவி. நான் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.

என்னை சார்ந்துள்ள மற்றும் கட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் என்னை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் கருத்துக்களை கேட்டு, எதிர்கால நலன் கருதி மாற்று கட்சியில் இணைவதா? அல்லது தனித்து செயல்படுவதா? என்பது குறித்து முடிவு எடுப்பேன்.

அந்த முடிவை வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அறிவிப்பேன். அப்போது தான் கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களின் எண்ணிக்கை தெரியும் என்றார் கோவிந்தசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X