விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கார் மீது லாரி மோதல்-படுகாயம்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமார் பயணித்த கார் மீது லாரி மோதியது. இதில் ரவிக்குமார் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. டி.ரவிக்குமார் (50). இவர் நேற்று அதிகாலை கார் மூலம் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை புதுச்சேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(34) என்பவர் ஓட்டி வந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சூனாம்பேடு அடுத்த கோட்டைக்காடு என்ற இடத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எம்.எல்.ஏ.வின் கார் முன்பு ஒரு மாட்டுவண்டி சென்று கொண்டிருந்தது. அந்த மாட்டு வண்டியின் மீது எதிரே வந்த ஒரு லாரி மோதியது. இதில் மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற முருகன் (30) படுகாயமடைந்தார். மாடு பரிதாபமாக உயிரிழந்தது.
மாட்டு வண்டியின் மீது மோதிய லாரி மீண்டும் தறிகெட்டு ஓடி எம்.எல்.ஏ.வின் கார் மீதும் மோதியது. சுதாரித்துக் கொண்ட டிரைவர் ராமகிருஷ்ணன் காரை இடதுபுறமாக திருப்பினார். அப்போது கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது.
இதில் கண்ணாடி உடைந்து ரவிக்குமாருக்கு நெற்றியில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை புதுச்சேரிக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். மாட்டு வண்டியை ஓட்டி வந்த முருகனையும் அதே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ராமகிருஷ்ணன் காயமின்றி தப்பினார்.
விரைந்து வந்த போலீஸார், வழக்குப் பதிவுசெய்து லாரி டிரைவர் மாணிக்கராவ் என்பவரைக் கைது செய்தனர். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் ஆவார்.