ப.சிதம்பரம் வருகையை எதிர்த்து விழுப்புரம் காங். கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம்: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விழுப்புரத்திற்கு வரக் கூடாது. வந்தால் அவரை எதிர்ப்பது என விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பார்கள். ஆனால் காங்கிரஸுக்கோ செல்லும் இடமெல்லாம் கோஷ்டிப் பூசல் என்று கூறலாம்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமன் தலைமையில் கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ். திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள காமராஜர் பிறந்தநாள் விழா கூட்டம் மாவட்ட, நகர காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்படாமல் தனிப்பட்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொள்ள கூடாது. இதனையும் மீறி பங்கேற்றால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு எதிராக ப.சிதம்பரம் கோஷ்யினரும் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கள்ளக்குறிச்சியில் வருகிற 18-ந்தேதி காமராஜர் பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொள்வது உறுதி.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி எம்.பி. மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொள்கிறார்கள் என்றார்.