தனியாக உள்ள பெண்களுக்கு செக்ஸ் தொல்லை தருவோருக்கு போலீஸ் எச்சரிக்கை
கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது மைதீன். இவர் நடத்தி வந்த டிராவல்ஸ் நிறுவனம் நஷ்டம் அடைந்ததால் நண்பர்கள் என்ற போர்வையில் நுழைந்த மைதீன், அசன்இப்ராகீம், ஆரிபுல்லா ஆகியோர் முகமது மைதீனின் மனைவி பாத்திமாவை கந்து வட்டிக்காக மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
அத்துடன் அவரை செல்போன் கேமிரா மூலம் படமெடுத்து கடையநல்லூர் பகுதியில் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் பரப்பியுள்ளனர். இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆபாச படங்களை ரூ.100, ரூ.200ஐ பெற்று கொண்டு அனுப்பியுள்ளனர். இந்த படங்களில் உள்ளவர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்பதால் பலர் வியாபார நோக்கோடு இதை அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் கடையநல்லூர் பகுதியில் இருந்து சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வரும் இளைஞர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இவர்களில் பலர் திருமணமாகி உடனடியாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக போய் விட்டவர்கள். திருமணமான சில நாட்களில் கூட மனைவியை பிரிந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை கணவர்களுக்கு ஏற்படுகிறது.
இதனால் தனியாக இருக்கும் இளம்பெண்களை குறிவைத்து சில இளைஞர்கள் செக்ஸ் டார்ச்சர் செய்து வருகின்றனர். பலர் வெளியே கூறாமல் இருப்பதால் உண்மைகள் வெளியே வராமல் உள்ளன.
அதுபோல வெளிநாடுகளில் இருந்து வரும் இளைஞர்களை குறிவைத்து சில சமூக விரோதிகள் பெண்ணாசை காட்டி அழைத்து சென்று மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தனிமையில் இருக்கும் பெண்களை மிரட்டி இதுபோல நடந்து கொள்வதும், ஆபாசப் படங்களை பரப்புவதும் கடும் குற்றமாகும் என தெரிவித்துள்ள கடையநல்லூர் போலீஸார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.