கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பூங்கா-திறந்து வைத்தார் கருணாநிதி
கோவை அவினாசி சாலையில், மருத்துவக் கல்லூரி அருகே ரூ. 380 கோடி செலவில் பிரமாண்டமான டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்காவின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது.
இதற்காக விமானம் மூலம் முதல்வர் கருணாநிதி கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாலையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் டைடல் பூங்காவை தொடங்கி வைத்து கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா, மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
8 தளங்களைக் கொண்டது இந்த டைடல் பூங்கா. ஒவ்வொரு தளமும் தலா 2 லட்சம் சதுர அடிகளைக் கொண்டதாக உள்ளது. பூமிக்குக் கீழே 3 தளங்களும், மேலே 5 தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள 3 தளங்களும் கார் பார்க்கிங் வசதிக்காக அமைக்கப்பட்டவை.
அனைத்து வசதிகளும் நிறைந்ததாக இந்த டைடல் பூங்கா வளாகம் அமைந்துள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப்பப் பூங்கா மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பதிலடி பொதுக்கூட்டம்
டைடல் பூங்கா திறப்பு விழாவை முடித்துக் கொண்டு வ.உ.சி. திடலில் இரவில் நடைபெறும் பிரமாண்டப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.
சமீபத்தில் இதே இடத்தில் 2 லட்சம் பேரைக் கூட்டி பிரமாண்டமான கண்டனக் கூட்டத்தைக் கூட்டி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இந்தக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பரபரப்பு புகார்களையும் அவர் கூறினார். இந்த நிலையில் அவருக்குப் பதிலடி தரும் வகையில் இன்று அதே இடத்தில் மேலும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.