தமிழ்நாட்டில் காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா?-ஜெ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், திருவிடைச்சேரியில் ஒரு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், திருவிடைச்சேரி அதிமுக கிளைச் செயலாளர் ஜபருல்லாவின் மைத்துனர் முகமது மற்றும் அந்த ஊரின் ஜமாத் தலைவர் இஸ்மாயில் ஆகியோர் மரணமடைந்த செய்தி கேட்டும்,
அந்த வழியே சென்று கொண்டிருந்த சேதனிபுரம் ஊராட்சி, விழுதியூர் அதிமுக கிளைச் செயலாளர் பால்ராஜ் மகன் சந்தியாகு, விழுதியூர் கிளை ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ராமதாஸ் மற்றும் அந்த ஊவூரைச் சேர்ந்த ஹாஜா ஆகியோர் படுகாயமடைந்த செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
திருவிடைச்சேரியில் நடைபெற்ற கலவரத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். எனவே, அந்தப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள மறுப்பு:
இந் நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவிடைச்சேரி என்ற கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹாஜி முஹம்மது என்பவர் துப்பாக்கியால் சுட்டு இருவர் இறந்து விட்டதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு முரணானதாகும்.
துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியோ, உறுப்பினரோ, அனுதாபியோ அல்ல. அவர் எங்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்தக் கூடியவரும் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை ஆதரிப்பவரும் அல்ல.
அவரது உறவினர் குத்புதீன் என்பவரை சிலர் தாக்கிவிட்டனர் என்பதால், உறவினருக்காக நியாயம் கேட்க அவர் வந்தபோது ஊர் ஜமாஅத்தார்களுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது தான் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுடப்பட்டவர்களில் முஸ்லிமல்லாதவர் மூன்று பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தச் சம்பவத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்தக் காலத்திலும் இது போன்ற வன்முறையை தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்ததில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.