அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் மீது திமுக பிரமுகர் சரமாரி கல் வீச்சு
செஞ்சி: செஞ்சி அருகே நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தி.மு.க. பிரமுகர் கல் வீசி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள நீலாம்பூண்டி கிராமத்தில் அதிமுக சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசும் போது தி.மு.க., அரசு, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதனால், ஆவேசம் அடைந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் தெருவில் கிடந்த கற்களை எடுத்து முன்னாள் அமைச்சர் சண்முகம் மீது சரமாரியாக வீசினார்.
இதனால் பொங்கி எழுந்த அ.தி.மு.க. வினர், கல் வீசிய நபரைப் பிடித்து நையப் புடைத்தனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை முன்னாள் அமைச்சர் சண்முகம் சமாதானம் செய்ததையடுத்து போலீசார் பாதுகாப்புடன் பொதுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.