ஜெ சொத்து குவிப்பு வழக்கு: சாட்சிகளின் வாக்குமூலத்தை மொழி பெயர்க்க வக்கீல் நியமனம்
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணையின் போது சாட்சிகளின் வாக்குமூலத்தை மொழிபெயர்க்க வழக்கறிஞர் ராஜகோபால் என்பவரை நியமித்துள்ளது பெங்களூர் தனி நீதிமன்றம்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தி்ல் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு வழக்கை இழுத்தடிக்க ஜெயலலிதா தரப்பு பலவித முயற்சிகளில் இறங்கியுள்ளதாக திமுக குற்றம் சாட்டி போராட்டமும் நடத்தியது.
இந் நிலையில் இந்த வழக்கில் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சாட்சிகளின் ஆவணங்களின் நகல் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அவர் கேட்ட ஆவணங்களின் நகல் ஜெயலலிதாவின் வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டன.
இதையடுத்து இந்த ஆவணங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததில் நிறைய பிழைகள் இருப்பதாகவும், எனவே அந்த மொழிபெயர்ப்பை ரத்து செய்து விட்டு, மீண்டும் புதிதாக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்றும் கோரி ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், ஜெயலலிதாவின் அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மொழிபெயர்ப்பில் தவறுகள் இருந்தால் அவற்றை திருத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் அரசு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராயினர். இரு தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையின் போது சாட்சிகள் தமிழில் கூறுவதை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்ல வழக்கறிஞர் ராஜகோபால் என்பவரை நியமனம் செய்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.