காஷ்மீரில் பெண் தீவிரவாதிகள் ஊடுருவல்: ராணுவ உளவுப் பிரிவு எச்சரிக்கை
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 மாதமாக தொடர் வன்முறை சம்பவங்களில் 110 பொது மக்கள் பலியாகியுள்ள நிலையில் அங்கு லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பெண் தீவிரவாதிகள் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக உளவுப் பிரிவுகள் எச்சரித்துள்ளன.
காஷ்மீர் பிரிவினை கோரி அங்கு பொது மக்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது வன்முறைகள் சற்று ஓய்ந்து வரும் நிலையில், மீண்டும் பிரச்சனையை சிக்கலாக்கும் முயற்சிகளில் லஷ்கர் ஏ தொய்பா ஈடுபட்டுள்ளதாக மத்திய, ராணுவ உளவுப் பிரிவுகள் எச்சரித்துள்ளன.
இதற்காக பெண் தீவிரவாதிகள் குழு காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய நகரங்களில் பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபடும்போது, கூட்டத்துக்குள் புகுந்து தற்கொலை தாக்குதல்களை நடத்த பெண் தீவிரவாதிகளுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி கொடுத்துள்ளதாக ராணுவ உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு படை முகாம்கள், பாதுகாப்பு படை வீரர்கள் இருக்கும் சோதனைச் சாவடிகள் அருகில் வன்முறை நடக்கும்போது தற்கொலை தாக்குதல்களுக்கு பெண் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ள பெண் தீவிரவாதிகள் அனைவரும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் தான் என்றும் பாகிஸ்தானுக்கு சென்று பயிற்சி பெற்று விட்டு அவர்கள திரும்பியுள்ளதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் தற்கொலை தாக்குதல் நடத்தக் கூடும் என்று ராணுவ உளவுத்துறை தனது வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.