இந்தியா வருகை எதிரொலி-பல கூடை ஐஸ் வைக்கும் ஒபாமா!
அதிபரான பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார் ஒபாமா. இந்த நிலையில், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் ஒபாமாவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தான் நவம்பரில் இந்தியா வர மிகவும் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார் என்றார்.
இதற்கிடையே, ஐ.நா. கூட்டத்தில் பேசிய ஒபாமா இந்தியாவை வெகுவாகப் புகழ்ந்து பேசி ஐஸ் வைத்தார்.
ஒபாமா பேசுகையில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடானா இந்தியாவில், ஜனநாயகம் மேலும் தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது. காலணி ஆதிக்கத்திலிருந்து மீண்டு சிறப்பான நிலையை நோக்கி வந்துள்ளது இந்தியா.
அமைதியான முறையில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிய இந்தியாவுக்கு செல்வதில் பெருமைப்படுகிறேன். பல கோடி மக்கள், பல இன மக்கள் குழுக்கள் இணைந்து வாழும் இந்தியாவுக்கு விஜயம் செய்வது பெருமையாக இருக்கிறது என்றார் ஒபாமா.
தொடர்ந்து பேசிய ஒபாமா, இந்தோனேசியாவையும், அதன் ஜனநாயகத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.
அதேபோல நான் இந்தோனேசியாவுக்கும் செல்லவுள்ளேன். உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா, மிகச் சிறந்த ஜனநாயக நாடாகவும் திகழ்கிறது என்றார்.
அமெரிக்க வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே போக வேண்டும். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் அவுட்சோர்சிங் வாய்ப்புகளை அளிக்கக் கூடாது, அப்படி அளித்தால், வரிச் சலுகைகள் ரத்து என்பது உள்பட பல்வேறு கெடுபிடிகளை அமெரிக்க அரசு கடைப்பிடித்து வருகிறது. சமீபத்தில் விசா நடைமுறையிலும் இந்தியர்களுக்கு ஆப்பு வைக்க இறங்கியுள்ளது.
இந்தியர்களும், சீனர்களும் நம்மை முந்தப் பார்க்கிறார்கள். எனவே அவர்களை வீழ்த்தும் வகையில் அமெரிக்கர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் ஒபாமா அடிக்கடி பேசி வருகிறார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு வரப் போவதையொட்டி இந்தியாவைப் போல ஒரு நாடு உண்டா என்று பேசி ஐஸ் வைத்துள்ளார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.