அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்தி வழங்கும்போதெல்லாம், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்குவது இந்த அரசின் நடைமுறையாக உள்ளது.
தற்போது மத்திய அரசு அலுவலர்களுக்கு பத்து சதவீதம் அகவிலைப்படியை 1.7.2010 முதல் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் 1.7.2010 முதல் பத்து சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் கலைஞர் இன்று ஆணையிட்டுள்ளார்.
உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி 1.7.2010 முதல் நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2190 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.