திண்டுக்கல் அருகே பெண் கொலை-சாலையோரம் குழந்தையுடன் கிடந்த உடல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டு அவரது ஒன்றரை வயது குழந்தையுடன் சாலையோரத்தில் கிடந்தார்.
அவரை காரில் கடத்திச் சென்ற கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்து, உடலையும் குழந்தையையும் சாலையோரம் வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி செங்கமலையான் கோவில் அருகே, ஒரு குழந்தையின் அழுகை குரல் கேட்டது. அந்தப் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒன்றரை வயது குழந்தை அழுது கொண்டிருந்தது.
அருகில் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாகக் கிடந்தார். இது குறித்து உடனடியாக கன்னிவாடி போலீசுக்கு தகவல் தரப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் நெற்றி, கால் பகுதியில் மட்டும் லேசான காயம் உள்ளது.
பிணமாக கிடந்த பெண்ணின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரது பெயர் விவரம் தெரியவில்லை. பிரவுன் கலரில் சேலை அணிந்திருந்துள்ள அவர் கழுத்தை இறுக்கியும் இடுப்பில் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற ஒரு கார், இந்த கோவில் அருகே சிறிது நேரம் நின்றதாக அப் பகுதியினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதில் வந்தவர்கள் தான் பெண்ணின் உடலையும், குழந்தையும் அங்கு வீசியிருக்க வேண்டும் என்று தெரிகிரது.
பெண் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்தது யார் என்பது மர்மமாக உள்ளது.
குழந்தையுடன் சென்ற பெண்ணை காரில் கடத்தி சென்று, கற்பழித்து கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிணம்-அதிர்ச்சியில் பெண் சாவு:
முன்னதாக சாலையோரத்தில் பெண்ணின் உடலும் குழந்தையும் கிடப்பதாக செய்தி பரவியதால் கன்னிவாடி மற்றும் சுற்றுப் பகுதி கிராம மக்கள் அங்கு குவிந்தனர்.
லெட்சுமி (25) என்பவரும் கூட்டத்தோடு வந்தார். பெண் கொடுரமாகக் கொலையாகிக் கிடந்ததைப் பார்த்த அவர் மயங்கி விழுந்தார்.
தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே இறந்தார்.