ஆலங்குளம் டாஸ்மாக்கில் போலீஸ் அதிரடி : ரூ.5 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்
ஆலங்குளம்: டாஸ்மாக் பார்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆலங்குளத்தில் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் 4 டாஸ்மாக் கடைகளும், அம்பை ரோட்டில் ஒரு கடையும் உள்ளது. இந்த கடைகளில் உள்ள பார்களில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கே சரக்குகள் விற்பனை நடப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆலங்குளம் டி.எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, செல்லப்பா மற்றும் போலீசார் டாஸ்மாக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அம்பை ரோட்டில் உள்ள பாருக்கு சென்றபோது அங்கு பெட்டி பெட்டியாக சரக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கடைகளில் வைக்கப்பட வேண்டிய சரக்குப் பெட்டிகள் எப்படி பாருக்குள் வந்தது என்று அங்கிருந்த விற்பனையாளர் துரைப்பாண்டி என்பவரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். உடனே அங்கிருந்த 131 மதுபானப் பெட்டிகளை பறிமுதல் செய்தனர். அதில் 6288 மதுபாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
இதை தொடர்ந்து மற்ற டாஸ்மாக் கடை பார்களிலும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே சரக்கு விற்பனை நடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கே விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 95 பீர் பாட்டில்கள் உள்பட 120 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.