அமைச்சர் தா.மோ.அன்பரசனின் மிரட்டல் பேச்சு-முதல்வருக்கு சிபிஎம் கடிதம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தொழிலாளர்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதிக்கு, தமிழ் மாநில சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது...
தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு நாளிதழில் (25.10.2010) வெளிவந்துள்ளது.
நாங்கள் நினைத்தால் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டம் போட முடியுமா? ரோட்டில் நடக்க முடியுமா? அடக்கி வாசியுங்கள். ஜாக்கிரதை என்று கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
அமைச்சரின் இந்த அச்சுறுத்தல் பேச்சு கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, நடவடிக்கைக்கும் உரியதாகும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக வன்முறையை தூண்டும் செயலாகும் என்றும் கருதுகிறோம்.
அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் பகிரங்கமாக வன்முறையைத் தூண்டி பேசுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் வட்டாரத்தில் ஃபாக்ஸ்கான், நோக்கியா, பி.ஒய்.டி. தொழிற்சாலை உள்ளிட்டு பல பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரம் தொழிலாளர்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, தொழிற்சங்க உரிமை போன்ற கோரிக்கைகளுக்காக போராடி வருகிற சூழலில்,
அமைச்சரின் இந்தப் பேச்சு தொழிலாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சியினரை தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு- தொழில் அமைதியை சீர்குலைக்கும் செயலாகாதா? தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தலைமை ஏற்று செயல்படும் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் தோழர் அ. சவுந்தரராசன், சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் இ. முத்துக்குமார் மற்றும் தொழிலாளர் தலைவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்துமல்லவா?
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அமைச்சர் பேசினாரா என்பதை தமிழக முதல்வர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
கூட்டம் நடத்தும் உரிமை இந்திய ஜனநாயகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமை. அரசியல் அமைப்புச்சட்டம் உறுதிபடுத்துகிற உரிமை. இது தங்களுக்கும் தெரியும்.
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன் என்று உறுதிமொழியேற்று செயல்படும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் எப்படி அரசியல் அமைப்பு சட்டத்தையும், ஏற்றுக்கொண்ட உறுதிமொழியையும் துச்சமென தூக்கியெறிந்து வன்முறையை தூண்டி பேசி உள்ளார். இதை எப்படி அனுமதிக்க முடியும். தமிழகஅரசும், தமிழக ஆளுநரும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே, சட்ட விதிகளுக்கும், ஜனநாயக நெறிகளுக்கும் புறம்பாக வன்முறையைத் தூண்டி பேசி, கம்யூனிஸ்ட்டுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும்,
அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் போராடும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.