நகை வியாபாரியை வறிமறித்து தாக்கி 15 கிலோ தங்கம், ரூ. 25 லட்சம் கொள்ளை
ஆரணி: ஆரணி அருகே காரில் சென்ற நகை வியாபாரியை வழிமறி்த்து அரிவாளால் வெட்டிவிட்டு 15 கிலோ தங்கம் மற்றும் ரூ. 25 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதில் 2 கொள்ளையர்களை போலீசார் ஜீப்பில் விரட்டிச் சென்று பிடித்தனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த கெளதம் சந்த், சிறு நகைக் கடைகளுக்கு நகைகளை விற்கும் வியாபாரியாவார். இவர் 15 கிலோ நகைகளுடன் வேலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அவருடன் உதவியாளரும், கார் டிரைவரும் இருந்தனர். ஆரணி அருகே இந்தக் காரை ஒரு ஸ்கார்பியோ மற்றும் ஒரு இன்டிகா ஆகிய கார்கள் பின் தொடர்ந்து வந்து வழிமறித்தது.
பின்னர் அதிலிருந்து இறங்கிய கும்பல் கௌதம் சந்த், டிரைவர், உதவியாளரை அரிவாள்களால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த 15 கிலோ தங்கம் மற்றும் ரூ. 25 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்டு கார்களில் தப்பியது.
இந்தக் கும்பலைப் பிடிக்க முயன்ற 3 கிராமத்தினரையும் அந்தக் கும்பல் அரிவாள்களால் வெட்டியது.
கெளதம் சந்த் மற்றும் காயமடைந்தவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து போலீசார் ஆரணி- சேத்பட் சாலையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கண்ணமங்கலம், தேவிகாபுரம், சேத்பத் ஆகிய கிராமங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது.
வாகன சோதனையின்போது கொள்ளைக் கும்பல் வந்த இன்டிகா காரை போலீசார் அடையாளம் கண்டனர். அந்தக் கார் சோதனைச் சாவடியில் நிற்காமல் செல்லவே அதை சேத்பட்டில் இருந்து போலீசார் ஜீப்பில் விரட்டிச் சென்று திண்டிவனம் அருகே மடக்கினர்.
காரை நிறுத்திவிட்டு தப்பியோடிய இருவரை போலீசார் பிடித்து நகை, பணத்தை மீட்டனர்.
சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் பிடிபட்டுவிட்டனர்.
ஸ்கார்பியோவில் தப்பிய மற்ற கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.