முடிவுக்கு வருகிறது என்.எல்.சி தொழிலாளர் வேலை நிறுத்தம்?
இன்று முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இதுகுறித்து மாலையில் அறிவிக்க உள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, நெய்வேலி சுரங்கத் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரப் பணியாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
அனைத்துக் கட்சிகள் சார்பில் கடலூர் மாவட்டத்தில் ஸ்ட்ரைக் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 22-ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க கோரிக்கையும் விடுத்தனர் அனைத்துக் கட்சி எம்பிக்கள்.
அப்போது, இந்தப் பிரச்சினை விரைவில் தீர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறினார்.
இந்த நிலையில் இன்று காலை தொழிற்சங்க நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்போது கோரிக்கைகளை பரிசீலிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து இன்று மாலை முடிவை அறிவிப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.