சென்னையில் நாளை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்ணா
மதுரை: இருபது ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி அக் .27 ம் தேதி சென்னையில் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில்,
20 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்தாலும் கேரள அரசு வழங்குவது போல் தமிழக அரசும் ஓய்வூதியம் வழங்க முன் வர வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவேண்டும், பணிமுதிர்வு தொகை பிடித்தம் செய்வதை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், மத்தியஅரசு வழங்குவது போல் குறைந்த பட்ச ஊதியமாக 3ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும்.
மேலும், முதல்வர் கருணாநிதியின் வாக்குறுதிபடி அரசாணை எண் 371 ஐ நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தாலும், அந்த தொகையை அவர்களது குடும்பத்திற்கு முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் எதிரில் நாளை தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது என்றனர்.