ராஜீவ் காந்தி சிலை அவமதிப்பு-சிபிசிஐடி விசாரணை கோரும் திருமாவளவன்
சென்னை: சென்னையில் ராஜீவ் காந்தி சிலை அவமதிக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 23-ம் தேதி சென்னை அசோக் நகரில் ராஜீவ்காந்தியின் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் அந்த செயலில் ஈடுபட்டதாகவும், நான்தான் அவர்களை தூண்டிவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் சிலர் அபாண்டமாக பேசி வருகின்றனர். என்னை கைது செய்ய வேண்டும் எனக் கோரி, வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
அரசியல் ஆதாயம் தேட முயலும் சிலர்தான், இவ்வாறு சட்டம், ஒழுங்கை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், உண்மைக் குற்றவாளிகள் யார் என அடையாளம் காணும் வகையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும், இனி இதுபோன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் திருமா.