தீபாவளிக்காக சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு-4 பேர் கைது
தூத்துக்குடி: ஏரல் சிவகளை பகுதியில் தீபாவளிக்காக ஒரு வீட்டில் அனுமதியின்றி சட்ட விரோதமாக தீபாவளிக்கான பட்டாசுகள் தயாரித்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிவகளை பகுதியில் ஒரு வீட்டில் அனுமதியின்றி சட்ட விரோதமாக தீபாவளிக்கான பட்டாசுகள் தாயாரித்து வந்தனர்.
இது குறித்து சிவகளை கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) அந்தோணி, ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, ஏரல் போலீசார் சிவகளை பகுதிக்கு சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் பட்டாசுகள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை செய்த போது அங்கு ஏராளமான வகை பட்டாசுகள், வெடிமருந்து, அலுமினிய பவுடர், வெடி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 3 கிலோ வெடி மருந்து, 5 கிலோ அலுமினிய பொடி, 200 திரிகள், 225 மத்தாப்பு பாக்கெட்டுகள், 2 மூட்டை ஓலை வெடிகள், 60 இரும்பு பைப்புகள் மற்றும் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பட்டாசு தயாரித்த சிவன் (62), முத்துலட்சுமி (50), லட்சுமி (45), தமிழரசி (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இருவர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.