தமிழகத்தை எய்ட்ஸ் இல்லா மாநிலமாக்க நடவடிக்கை-ஸ்டாலின்
திருச்சி : தமிழகத்தை எய்ட்ஸ் நோயே இல்லாத மாநிலமாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்றார். பாத்திமா நகரில், நடந்த நிகழ்ச்சியில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லம், தொழுநோய் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதிலும், அதைத் தடுப்பதிலும் தமிழகம் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எய்ட்ஸ் நோய் இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 783 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எச்ஐவி நோய் இருப்பவர்களுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒதுக்கி வேறுபடுத்துவதை நிறுத்தி, அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிக்கக் கூடிய வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக எஸ்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அறக்கட்டளை ஒன்றை கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்டது என்றார் ஸ்டாலின்.