ஜனவரியில்தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்-டாக்டர் ராமதாஸ்
விருதுநகர்: சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி மாதத்தில்தான் முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
விருதுநகரில் பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முல்லைப்பெரியாறு, பாலாறு, காவிரி பிரச்சினைகளில் தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. நமக்கு உள்ள உரிமை பறிக்கப்பட்டு உள்ளது. 1968-ம் ஆண்டு முதல் 42 ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்சினையை தீர்க்க இன்று வரை முடியவில்லை. உலகில் நீண்டகாலமாக தீர்க்க முடியாத பிரச்சினையாக இது உள்ளது.
இதற்கு முன்பு 32 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காண முடியவில்லை. 1991-ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பும், 2008-ல் இறுதி தீர்ப்பும் கிடைத்தபோதும் இன்றும் இந்த பிரச்சினை அந்தரத்தில் தொங்கி வருகிறது.
1965-க்கு பிறகு போராட்ட குணத்தை நாம் இழந்து விட்டோம். நம்மிடம் ஒற்றுமை இல்லை. தென் மாவட்டங்களில் மழையை நம்பி விவசாயம் உள்ளது. இதற்கு கேரளாவில் உள்ள பம்பா அச்சங்கோவில் நதியை திருப்பிவிட்டால் விவசாயம் வளம் அடையும்.
விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க போராடி வருகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் முடிவு செய்யப்படும்.
தென் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சி அடைய ஒவ்வொரு பகுதியிலும் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம் என்றார் அவர்.