உ.பி.: திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை: பஞ்சாயத்து தீர்ப்பு
முசாபர்நகர்: திருமணமாகாத கன்னிப் பெண்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது. கன்னிப் பெண்கள் தங்கள் காதலர்களுடன் ஓடுவதைத் தடுக்கவே இந்த நடிவடிக்கையாம்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள லங்க் கிராமத்தில் நேற்று அனைத்து ஜாதியினரின் பஞ்சாயத்துக் கூட்டம் நடந்தது. இதில் இளைய தலைமுறையினரை செல்போன் எவ்வாறு சீரழிக்கிறது என்பது பற்றி பேசினர். இதையடுத்து தான் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து பஞ்சாயத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்தர் மாலிக் கூறியதாவது,
இந்த பஞ்சாயத்து திருமணமாகாத கன்னிப் பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது. அவர்கள் தங்கள் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக காதலர்களுடன் வீட்டை விட்டு ஓடுவதைத் தடுக்கத் தான் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதே மாவட்டத்தில் உள்ள ஷோரம் கிராமத்து காப் பஞ்சாயத்துகள் அனைத்தும் கடந்த 14-ம் தேதி கோத்ரா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து திருமணச் சட்டம், 1955-ல் திருத்தம் கொண்டுவரும்படி வலியுறுத்தின.