2016ல் தமிழக முதல்வர் அன்புமணி: காடுவெட்டி குரு
வன்னியர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுவை மாநில வன்னியர் சங்கத் தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய குரு,
பாமகவை ஜெயலலிதா மரம்வெட்டி கட்சி என்று சொல்கிறார். மரத்தை வைத்தவர்கள் விவசாயிகள். அவரோ அல்லது அவரது சாதிக்காரர்கள் மரம் வைத்தார்களா?.
வன்னியர்களின் உரிமைக்காக அன்று நடந்த தொடர் சாலை மறியலில் 21 பேர் வீரமரணம் அடைந்தனர். போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தால் அந்த சம்பவம் நடைபெற்றது. வன்னியர்களின் எழுச்சியை உலக நாடுகளே பாராட்டின.
பாட்டாளி மக்கள் கட்சி தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது. இந்த இட ஒதுக்கீடு 107 சாதிகளுக்கு கிடைத்துள்ளது. இதற்காக போராடியவர்கள் வன்னியர்கள்.
1989ம் ஆண்டு தமிழகத்திலும், 2005ம் ஆண்டு புதுவையிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்தவர் டாக்டர் ராமதாஸ் தான்.
புதுவை மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் வன்னியர்கள். எனினும் சிறுபான்மையினரே முதல்வராக இருந்து வந்தனர். புதுவையில் வன்னியர் தான் முதல்வராக வரவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் குரல் எழுப்பியதால்தான் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வன்னியர் முதல்வராக்கப்பட்டார்.
தமிழகத்திலும், புதுவையிலும் சிறுபான்மையினர் முதல்வராக உள்ளனர். பெரும்பான்மையினர் அவர்களுக்க அடிமையாக உள்ளனர்.
மற்றவர்கள் சங்கம் வைத்தால் யாரும் எதுவும் கேட்பதில்லை. ஆனால் வன்னியர்கள் சங்கம் வைத்தால் கோபப்படுகிறார்கள். இந்தியாவில் காங்கிரசுக்கு முன்னதாகவே தோன்றிய சங்கம் வன்னியர் சங்கம்.
1981ம் ஆண்டு வன்னியர் மகா சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. 18 புராணங்களில் 9வது புராணம் வன்னியர் புராணம்.
வரும் 2016ம் ஆண்டு புதுவையிலும், தமிழகத்திலும் வன்னியர் ஆட்சி நடைபெற வேண்டும். தமிழகத்தில் 2016ம் ஆண்டில் அன்புமணி முதல்வராக வருவார் என்றார்.