பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் தாக்கி ஆயுள் தண்டனை கைதி சாவு
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் 7 கைதிகள் சரமாரியாக தாக்கியதில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இறந்தார்.
குமரி மாவட்டம் கல்குளம் அருகேயுள்ள வீரவிளையைச் சேர்ந்த பங்கிராஜ் மகன் சுப்பிரமணியன் என்ற ஆசி. ஒரு கொலை வழக்கில் இரணியல் போலீசார் அவரை கைது செய்து கடந்த 9-9-1996ல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆயுள் தண்டனைக் கைதியான அவர் பாளையங்கோட்டை மத்திய உள்சிறையில் உள்ள புதிய கட்டிடத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறையில் சில வாரங்களாக கமாண்டோ படையினர் செல்போன்களை பறித்தும், கண்டெடுத்தும் வருகின்றனர். கைதிகளிடம் செல்போன் இருப்பதை சுப்பிரமணியன் தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருகிறார் என்ற சந்தேகம் சில கைதிகளுக்கு ஏற்பட்டது. இதனால் அவரிடம் சில நாட்களாக தகராறு செய்து வந்தனர்.
நேற்று மதியம் சுப்பிரமணியன் கழிவறைக்கு சென்றுவிட்டு வரும்போது அங்கு வந்த 7கைதிகள் அவர் மீது போர்வையை போட்டு மூடி சரமாரியாக தாக்கினர். இதில் அவரது நெஞ்சு, மர்ம உறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சிறைக் காவலர்கள் அவரை மீ்ட்டு சிறைக்குள் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.