ஸ்பெக்ட்ரம் இழப்பு-பொறுப்புடன் செயல்பட சிபலுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை
ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் சிபல் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி சமர்ப்பித்துள்ள அறிக்கையை விமர்சித்திருப்பதும், அதில் கூறியுள்ளபடி நஷ்டமே ஏற்படவில்லை என்றும் சிபல் பேசியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
சிஏஜி அறிக்கையை குறைத்து மதிப்பிட்டிருப்பது தவறானது. பொறுப்புணர்வுடன் அமைச்சர் செயல் பட வேண்டும்.
சிபிஐ இந்த ஊழல் தொடர்பான விசாரணையை தீவிரமாக தொடர வேண்டும். யாருடைய பேச்சாலும், பத்திரிக்கைச் செய்திகளாலும் சிபிஐ தவறான பாதைக்குத் திரும்பி விடக் கூடாது. தனது கவனம் திசை திரும்பாமல் தொடர்ந்து தீவிரமாக இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.