ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் ஹீரோவாக விரும்பவில்லை!! - ராகுல் 'நச்' பதில்
அன்னா ஹஸாரேவின் ஊழல் ஒழிப்புப் போராட்டம் பற்றிய கடிதம் ஒன்றுக்கு ராகுல்காந்தி சமீபத்தில் அளித்த பதில்தான் இது.
ஊழல் ஒழிப்பை வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்த அன்று, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கிருஷ்ணய்யர் கூறி இருப்பதாவது:
அன்னா ஹசாரே போராட்டம் ஏன் நடந்தது? எத்தனையோ தீமைகள் நடந்தும், டெல்லி நடவடிக்கை எடுக்காததால்தான். பிரதமர் மன்மோகன்சிங், செயல்படாமல் இருப்பதிலேயே புகழ்பெற்றவர். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீதே புகார் வந்தும்கூட, அதுபற்றி கருத்து தெரிவிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ மன்மோகன்சிங் தயாராக இல்லை.
பாராளுமன்றம், நேரத்தையும், மக்கள் பணத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள், உலக அளவிலான ஊழல் மூலம், வருவாயை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீதித்துறையே ஊழல் மயமாகிவிட்டது. ஆனால் ஒரு நீதிபதி கூட தண்டிக்கப்படவில்லை.
நீங்களாவது ஹீரோவாகுங்கள்....
அந்த அளவுக்கு ஊழல் புரையோடிப் போயுள்ளது. மக்கள் மீது அக்கறை இருந்தால், ஆட்சியில் உள்ள பெரிய ஊழல் மனிதர்களுக்கு எதிராக நீங்கள் (ராகுல் காந்தி) குரல் கொடுக்க வேண்டும். அதை விடுத்து ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? நீங்கள் இளைஞர். இந்தியாவை காந்திய இந்தியாவாக மாற்ற போராடினால், நீங்கள் ஹீரோ ஆகலாம்.
நீங்கள் ஜெயிலுக்கு சென்றது இல்லை. போராட்டத்துக்காக, ஒருநாள் கூட அடைத்து வைக்கப்படவில்லை. உங்கள் தாத்தா நேரு எழுதிய சுயசரிதையை படியுங்கள். அதன்மூலம், தேசபத்தி, சோசலிசம், சுதந்திர போராட்டம் ஆகியவை பற்றி தெரிந்துகொள்வீர்கள்," என்று கிருஷ்ணய்யர் கூறியிருந்தார்.
ராகுல் பதில்...
இந்த கடிதத்துக்கு ராகுல் காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், "நல்ல சிந்தனை கொண்டவர்களைப் போலவே, நானும் ஊழலை நினைத்து கவலைப்படுகிறேன். ஆனால் ஊழலை ஒழிக்க அமைதியாக செயல்பட்டு வருகிறேன். அதற்காக ஏதாவது அதிரடியாக செய்து ஹீரோ ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை.
நான் விழித்திருக்கும் பெரும்பாலான நேரங்களில், இந்த கெட்டுப்போன சமுதாயத்தை மேம்படுத்துவது பற்றியும் ஊழலற்றி இந்தியாவை உருவாக்குவது பற்றியும்தான் சிந்தித்து வருகிறேன். அதற்காக, உங்களைப் போல வெறுமனே குறை கூறுவதுடன் விட்டு விடுவதில்லை.
நேருவின் சுயசரிதையை நான் ஏற்கனவே படித்துள்ளேன். வேண்டுமானால், மீண்டும் படிக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
இக்கடிதத்துக்கு பதில் எழுதியுள்ள வி.ஆர்.கிருஷ்ணய்யர், தனது கடிதம் காயப்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.