வெறும் 3 இடங்கள்..பாமகவுக்கு 'டாட்டா' காட்டிய வன்னியர்கள்!
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது பாமக. பின்னர் திமுகவை கடுமையாக விமர்சித்து அதைக் கடுப்பேற்றி வந்தது. மிக மிக பொறுமை காத்து வந்த திமுக, பின்னர் வேறு வழியில்லாமல் பாமகவை கூட்டணியை விட்டு விலக்கியது.
இதையடுத்து கடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இந்தக் கூட்டணிக்கு மக்கள் பெரும் அல்வா கொடுத்தனர். பாமக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் போனது. இதனால் பாமகவின் வன்னியர் வாக்கு வங்கி கரையத் தொடங்கி விட்டதாக பேசப்பட்டது.
இதனால் பயந்து போன டாக்டர் ராமதாஸ் வன்னியர் பகுதிகளை வலம் வந்து மீண்டும் ஜாதிச் சாயத்தை தன் மீது பூசிக் கொண்டு வன்னியர் பேச்சாக பேசி வந்தார்.
மேலும் பென்னாகரம் இடைத் தேர்தலின்போது இழந்த பெயரை மீட்க கடுமையாக பிரசாரம் செய்தார். பணத்தையும் பெருமளவில் இறக்கி விட்டதாக கூறப்பட்டது. இதன் விளைவாக அத்தேர்தலில் பாமக 2வது இடத்தைப் பிடித்தது. அதிமுக டெபாசிட் இழந்தது.
இதையடுத்து மீண்டும் திமுக கூட்டணியில் பாமக முதல் ஆளாக நுழைந்தது. அதே வேகத்தில் 31 தொகுதிகளையும் பெற்றது. பின்னர் அதில் ஒரு தொகுதியை கருணாநிதி எடுத்துக் கொண்டு காங்கிரஸுக்குக் கொடுத்தார்.
வன்னியர் வாக்கு வங்கி தங்களுக்குக் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் விஜயகாந்த்தின் தேமுதிக அந்த வாக்கு வங்கிக்குள் எப்போதோ நுழைந்து ஓட்டையைப் போட்டு வைத்திருந்தது அவருக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்.
தற்போதைய தேர்தலில் அது நிரூபணமாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்துடன் இருந்த திமுகவின் துணையுடன் போட்டியிட்டும் கூட மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது பாமக.
30 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக தற்போதைய தேர்தலில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியி்ன் முக்கியப் புள்ளிகள் எல்லாம் மண்ணைக் கவ்வியுள்ளனர்.
பாமகவின் இந்த மோசமான நிலைக்கு அதன் போக்குதான் முக்கியக் காரணம். சற்றும் நம்பகத்தன்மை இல்லாத செயல்பாடுகள், குடும்பத்திற்காக கட்சியை நடத்துகிறார் ராமதாஸ் என்ற தீவிரமான எதிர்க்கட்சிகளின் பிரசாரம், அன்புமணிக்காக ஒரு சீட் கேட்டு திமுக, அதிமுக என அவர் மாறி மாறி அலைந்தது, பதவிக்காக எதையும் செய்யத் துணியும் அளவுக்கு கீழே இறங்கிப் போவது ஆகியவை ராமதாஸுக்கு எதிராக அமைந்து போய் விட்டது.
அதை விட முக்கியமாக ஈழத் தமிழர் பிரச்சினையில் அவர் அடித்த அந்தர்பல்டியால் தமிழ் உணர்வாளர்கள் பாமக மீது கடும் அதிருப்தியும் வேதனையும் அடைந்து போயிருந்தனர். இத்தனையும் சேர்ந்துதான் இன்று பாமகவுக்கு எதிராக திரும்பி விட்டது.
மேலும் விஜயகாந்த்தின் எழுச்சியும், வளர்ச்சியும், பாமகவின் வாக்கு வங்கியை கடுமையாக பதம் பார்த்து விட்டதும் மறுக்க முடியாத உண்மை.
இப்படி நாலாபக்கமும் தன்னையும், தனது வாக்கு வங்கியையும் பலர் வளைத்து வீக் ஆக்கி விட்டதை உணராமல் பழைய கதையேயே பேசி வந்த டாக்டர் ராமதாஸுக்கு இந்தத் தேர்தல் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது.
மேலும் தனது சாதியினராகவே இருந்தாலும் கூட தன் இஷ்டத்திற்கு கூட்டணியை மாற்றுவதும், தன் இஷ்டத்திற்கு அணி மாறுவதும், அவர்களை கரிவேப்பிலை போல தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு மற்ற நேரங்களில் ஓரம் கட்டி வைத்து விடுவதும் இனியும் கதைக்கு ஆகாது என்பதையும் இந்த தேர்தல் மூலம் வன்னிய சமுதாயத்தினர் எடுத்துக் காட்டியிருப்பதாகவே கருதப்படுகிறது.
அடுத்து ஐந்து ஆண்டுகளை பாமக எப்படி ஓட்டப் போகிறது என்பதுதான் இப்போது பாமகவினரின் பெரும் கவலையாக மாறியுள்ளது.