அல் கொய்தாவின் தற்காலிக தலைவராக சைப் அல் அதெல் தேர்வு
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் கடந்த 2ம் தேதி பாகிஸ்தானின் அப்போத்தாபாத்தில் வைத்து சுட்டுக் கொன்றன. இதையடுத்து ஒசாமா வாரிசு யார் என்ற கேள்வி எழுந்தது. அடுத்த தலைவர் யார் என்று தெரியாமல் அமைப்பினர் குழம்பினர்.
இந்நிலையில் அல் கொய்தாவின் தற்காலிக தலைவராக எகிப்தைச் சேர்ந்த சைப் அல் அதெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அல் கொய்தாவின் சூரா கவுன்சில் இவரை அந்த அமைப்பின் தலைவராகத் தேர்வு செய்துள்ளதாகவும், இவரது முதல் பணி ஒசாமா பின் லேடனின் கொலைக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கும் என்றும் அமெரிக்க உளவுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.
அதெலுடன் முகம்மத் இலியாஸ் காஷ்மீரி, அட்னான் சுக்ரிஜூமா ஆகியோரும் இந்த பழி வாங்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதெல் (எ) முகமது இப்ராகிம் மக்காவி இனி, அல் கொய்தாவை வழி நடத்துவார். அதே நேரத்தில் ஐமான் அல் ஜவாஹிரி தான் ஒசாமாவின் வாரிசாக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சைப் அல் அதெல் என்ற பெயருக்கு நீதி வழங்கும் வாள் (Sword of Justice) என்று அர்த்தமாம். முன்னாள் எகிப்து ராணுவ சிறப்பு அதிரடிப் படை வீரரான இவர், லிபிய இஸ்லாமிய தாக்குதல் படை (Libyan Islamic Fighting Group-LIFG),என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தபோது அல்-கொய்தாவுக்கு நெருக்கமானார்.
1980களில் அல்-கொய்தாவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வந்த அதெல், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தவுடன் ஈரானுக்கு தப்பினார். அங்கிருந்தபடியே செளதி அரேபியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களை அதெல் நடத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அதெல் பாகிஸ்தானில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
எகிப்தைச் சேர்ந்தவரான அல்-ஜவாஹிரியின் பரிந்துரையின் பேரில் அதெல் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கருதுகிறது. இதனால் அல்-கொய்தாவில் எகிப்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும் என்றும் அதை, பின் லேடனின் அரேபிய ஆதரவாளர்கள் எதிர்க்க வாய்ப்புள்ளதால், அந்த அமைப்பில் பிளவுகள் ஏற்பட அதிக சாத்தியம் உள்ளதாகவும் அமெரிக்கா கருதுகிறது.
இதற்கிடையே தலிபான் தலைவர் முல்லா ஒமரை அல் கொய்தா அமைப்பிடமிருந்து தூரமாக விலகச் செய்யும் வேலைகளை சிஐஏ துவக்கியுள்ளது. தலிபான்களுடன் பேச்சு நடத்தி ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு தரவும் அமெரிக்கா தயாராக உள்ளது. இதற்கு ஒரே நிபந்தனையாக, தலிபான்கள் அல் கொய்தாவிடமிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா வைத்துள்ளது.