ராஜ்யசபா எம்.பி பதவி: அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ராஜினாமா
ராஜ்யசபா எம்பியாக இருந்த இவரை சட்டமன்றத் தேர்தலில் நிறுத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதில் வெற்றியும் பெற்ற இவருக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியும் வழங்கினார்.
ராமலிங்கம் கடந்த ஆண்டு ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ம் ஆண்டு வரை அவருக்கு எம்பி பதவிக் காலம் உள்ளது. இந் நிலையில் மாநில அமைச்சராகியுள்ள இவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார்.
நாளை டெல்லி சென்று ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான அன்சாரியிடம் அவர் ராஜினாமா கடிதத்தை தருவார் என்று தெரிகிறது. இந்த காலியிடத்துக்கு தேர்தல் நடக்கும்போது அதிமுக சார்பில் இன்னொருவர் தேர்வு செய்யப்படுவார்.
சட்டசபை தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள், அமைச்சர் பதவி தரப்படாதவர்கள், முக்கிய புள்ளிகளை எதிர்த்து நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு இந்த எம்பி பதவி தரப்படும் என்று தெரிகிறது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் மம்தா:
இதற்கிடையே மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நாளை தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறார்.
அவர் வரும் 20ம் தேதி அவர் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். ரயில்வே அமைச்சர் பதவியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருக்கே மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று மம்தா வலியுறுத்தியுள்ளார். அவரது கோரிக்கை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.