தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும்
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு 34 சதவீத மழை தென்மேற்கு பருவகாலத்தில் கிடைக்கிறது. வடகிழக்கு பருவகாலத்தில் தான் தமிழகத்திற்கு அதிக அளவு மழை கிடைக்கும்.
இந்த வருடம் தமிழகத்தில் வெயில் காலம் துவங்கிய சில நாட்களிலேயே 4 நாட்கள் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. பின் மீண்டும் வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது தான் மக்கள் அஸ் உஸ் என்று படாதபாடு படுகின்றனர். அதிக பட்சமாக திருத்தணியில் 111 டிகிரி வெயில் பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. வரும் 29ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது.
வரும் 31ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து வானிலை அதிகாரி கூறுகையில், பசிபிக் கடலில் உள்ள தட்ப வெட்பநிலையின் அடிப்படையில் தான் பருவமழையை கணிக்க முடியும். இந்த ஆண்டு பசிபிக் கடல் பரப்பில் உள்ள வெப்பநிலை தென்மேற்கு பருவமழைக்கு சாதகமாக உள்ளது. அதன்படி வரும் 31ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன்பின்னர் பெங்களூர் உள்ளிட்ட சில இடங்களில் தொடங்கும். சரியாக ஒருவாரம் கழித்து தான் தமிழ்நாட்டில் தொடங்கும்.
குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தான் அதிக மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த மழை தான் பெய்யும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்றார்.