கேரளா: அமைச்சர் பதவியை பிடிக்க காங்கிரசில் கடும் போட்டி
திருவனந்தபுரம்: கேரள காங்கிரசில் அமைச்சர் பதவியைப் பிடிக்க கடிம் போட்டி நிலவுகிறது. இதனால் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே இன்று பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து உம்மன் சாண்டி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது. உம்மன் சாண்டிக்கு இன்று ஆளுநர் ஆர். எஸ். கவாய் பதவிப் பிரமானம் செய்து வைக்கிறார்.
காங்கிரசில் அமைச்சர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுவதால் அக்கட்சியின் அமைச்சர்கள் பட்டியல் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதனால் முஸ்லீம் லீக், கேரள காங். (எம்), ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமே உம்மன் சாண்டியுடன் இன்று பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.
காங்கிரசில் யார், யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதனால் உம்மன் சாண்டியும், ரமேஷ் சென்னிதலாவும் அமைச்சர்கள பட்டியலுடன் நாளை டெல்லி செல்கின்றனர். அங்கு சோனியா காந்தி மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. இவர்கள் 23-ம் தேதி நடைபெறும் விழாவில் பதவி ஏற்பார்கள் என தெரிகிறது. இதற்கிடையே முக்கிய இலாக்காக்களை கேட்டு முஸ்லீம் லீக், கேரள காங். (எம்) ஆகிய கூட்டணி கட்சிகளும் காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. இவர்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் கூட்டணி தலைவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.