ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து தமிழகத்தில் 42 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பயிற்சித் துறை தலைமை இயக்குநராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் அதே அந்தஸ்தில் சமூக நலம் மற்றும் மதிய உணவுத் திட்டத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த ரமேஷ்ராம் மிஷ்ரா, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் என்ற அதிகாரம் குறைந்த பதவிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளராக இருந்த சுப்புராஜ், அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் என்ற டம்மி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விவசாயத்துறை ஆணையராக இருந்த அதுல் ஆனந்த், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகமான சிம்டிஏவின் துணைத் தலைவராக இருந்த சூசன் மேத்யூ, தமிழக தொழில்துறை வளர்ச்சிக் கழகமான டிட்கோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலராக இருந்த இறையன்பு, பணி மற்றும் நிர்வாகத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் கல்வித்துறை செயலாளராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல மொத்தம் 42 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.