கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பணியிலிருந்து விடைபெறுகிறார் அமுதா
சென்னை: சட்டசபைத் தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டதால் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதாவை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்பு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார் அமுதா. சட்டசபைத் தேர்தல் பணிகள் தொடங்கிய பின்னர் அவர் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைப்படி, கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றினார்.மிகவும் சுறுசுறுப்பாக, அதேசமயம் கண்டிப்புடனும் அவர் பணியாற்றினார்.
தனது செல்போன் எண்ணை வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவித்து தேர்தல் தொடர்பான எந்த குறைகள், புகார்களாக இருந்தாலும் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்து செயல்பட்டார்.
பென்னாகரம் இடைத் தேர்தலிலும் இவர் சிறப்பாக செயல்பட்டார். தற்போது சட்டசபைத் தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டதால் அவரை விடுவிக்கலாம் என பிரவீன் குமார் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பவுள்ளார் அமுதா.
அமுதா, தங்களது மாவட்டத்திற்கு கலெக்டராக வர வேண்டும் என ஒவ்வொரு மாவட்ட மக்களும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.