கனிமொழி கைதால் திமுக-காங். கூட்டணிக்குப் பாதிப்பில்லை-காங்
ஆரம்பத்திலிருந்தே 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை திமுகவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகிறது காங்கிரஸ் என்பது அனைவரும் அறிந்தது.
இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி ராசாவை முதலில் பதவியிலிருந்து தூக்கியது காங்கிரஸ். இந்த நிலையில் இன்று கனிமொழி கைது செய்யப்பட்டு விட்டார். இதனால் திமுக வட்டாரம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில், கனிமொழி கைது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நேரடியாக கண்காணித்து வருகிறது. அதுதொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாகவே இன்றைய நடவடிக்கை (கனிமொழி கைது) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் (ராசா கைது) பிறகும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பாதுப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேபோலவே இப்போதும் எந்த மாற்றமும் ஏற்படாது. கனிமொழி கைதால் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது. தற்போது விசாரணை நடந்து வருவதால் இதற்கு மேல் விரிவாக கூற இயலாது என்றார் அவர்.