சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசன் நியமனம்
14வது தமிழக சட்டசபையின் பதவிக்காலம் தொடங்கி விட்டது. புதிய உறுப்பினர்கள் வருகிற 23ம் தேதி பதவியேற்கவுள்ளனர். அதற்கு முன்பு தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். நேற்று இரவு தற்காலிக சபாநாயகராக செ.கு. தமிழரசன் அறிவிக்கப்பட்டார்.
இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரான செ.கு. தமிழரசன் நீண்ட காலம் எம்.எல்.ஏவாக இருந்து வரும் மூத்த உறுப்பினர் ஆவார். இவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
அதன் பின்னர் 14வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் மே 23ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழரசன் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
பின்னர் மே 27ம் தேதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையின் முதல் கூட்டம் நடக்கும். அன்று கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக சபாநாயகர் தமிழரசனுக்கு இன்று காலை ஆளுநர் பர்னாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி ராஜ்பவனில் நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழரசன் என்பது குறிப்பிடத்தக்கது.