முருஙகைகாய் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம்
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் முருங்கைக்காய் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் உள்ளது. பீன்ஸ் விலை அதிகபட்சமாக ரூ.50-ஐ தொட்டுள்ளது.
ஆலங்குலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் காய்கறிகள் அங்குள்ள தையல் நாயகி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு தினமும் கேரளாவுக்கு அனுப்பபட்டு வருகிறது.
கடந்த மாதம் சீசனையொட்டி கிலோ ரூ.3 வரை விற்கப்பட்ட முருங்கைக் காய் விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.50 வரை விலை ஏற்றம் கண்டது. கடந்த 3 நாட்களாக கிலோ ரூ.35, 30 என ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது.
பீன்ஸ் விலை கடந்த இரண்டு நாட்களில் ரூ.50 வரை ஏறியுள்ளது. இன்றைய நிலவரப்படி தக்காளி, கத்தரிக்காய், பீட்ருட், பல்லாரி, புடலங்காய், போன்றவை கிலோ ரூ.15-ல் இருந்து ரூ.17 வரை சில்லரை விற்பனை கடைகளில் விற்கப்பட்டது.
சவ்சவ், வெண்டைக்காய், தேங்காய், கேரட், மல்லி கிலோ ரூ. 20 முதல் 25 வரை விற்கப்பட்டன. வெங்காயம் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.32 முதல் 36 வரை விற்கப்பட்டது.