2ஜி: ராசா வங்கிக் கணக்கு விவரங்கள்- சிபிஐ இன்று தாக்கல்?
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால அறிக்கையில் ஆ.ராசாவின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.
2ஜி ஊழல் வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ ஏற்கனவே 2 அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இன்று இடைக்கால அறி்க்கை தாக்கல் செய்கிறது. அதில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.
இது தவிர எஸ்ஸார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது சுமத்தபட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்ய சிபிஐ கூடுதல் கால அவகாசம் கேட்கும் என்றும் தெரிகிறது.
2ஜி வழக்கில் கைதாகி திஹார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, அவரது உதவியாளர் ஆர்.கே.சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் சித்தார்த் பெகுரா ஆகியோரின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்களை சிபிஐ இன்று சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கும் என்று டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ கூடுதல் கால அவகாசம் கேட்கும் என்று கூறப்படுகி்ன்றது.
இந்த குற்றப்பத்திரிகையில் எஸ்ஸார் குழுமத்துக்கும், லூப் டெலிகாம் நிறுவனத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்த விவரங்களும் இடம்பெறலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.