தெலுங்கானாவில் பந்த் தொடர்கிறது-தமிழகத்திலிருந்து செல்லும் பஸ்கள் ரத்து
சென்னை : தெலுங்கானா தனி மாநிலம் கோரி இன்றும் நடந்து வரும் பந்த் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குச் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக காளஹஸ்தி கோவில், திருப்பதிக்குச் செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் பெரும் பாதிப்படைந்தனர்.
நேற்று மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தாக்கப்படக் கூடும் என்ற அச்சத்தால் பேருந்துகளை இயக்கவில்லை. அதேபோல ஆந்திராவிலிருந்தும் சென்னைக்கு எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை.
இதனால் ஆந்திராவுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ஆனால் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தப் போவதாக தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளது. இதனால் அந்த இரு நாட்களும் தமிழகத்திலிருந்து எந்த ரயிலும் ஆந்திராவுக்கோ அல்லது ஆந்திரா வழியாகவோ செல்ல முடியாத நிலை உருவாகும்.