ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர காங். சதி: தெலுங்கானா ராஷ்டிரியி சமிதி புகார்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படாமல் ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வர காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டுவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தெலுங்கானாவை தனி மாநிலமாக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் இதில் 18 எம்.எல்.ஏ.க்கள் 4 எம்.பி.க்கள், 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் மட்டும் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர்கள் காங்கிரஸ் மேலிடக் கோரிக்கையை ஏற்று தான் பதவி விலகவில்லை என்று கூறப்படுகின்றது.
தெலுங்கானாவில் 48 மணி நேர பந்த் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் தெலுங்கானா முழுவதும் முடங்கியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மூத்த தலைவர் பாஜிரெட்டி கோவர்தன் கூறியதாவது,
ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர காங்கிரஸ் மேலிடம் சதித் திட்டம் தீட்டுகிறது. அதனால் தான் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை திடீர் என்று ராஜினாமா செய்ய வைத்துள்ளது. தற்போதுள்ள நிலையில் யாரை ஆந்திர முதல்வராக நியமித்தாலும் கோஷ்டி பூசலால் காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயர் தான் என்று அக்கட்சி மேலிடம் கருதுகிறது.
எனவே, ஆந்திராவில் ஆளநர் ஆட்சியைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தெலுங்கானாவை தனிமாநிலமாக்காமலேயே போராட்டத்தை முடக்கப் பார்க்கிறது. அது ஒருபோதும் நடக்காது.
தெலுங்கானா தனி மாநிலத்திற்காக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தொடர்ந்து போராடும். தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால் தான் அப்பகுதி மக்கள் வளர்ச்சியடைய முடியும் என்றார்.